தாய்ப்பால் ஊட்டுதலும், அதற்கு அப்பாலும்: கோவை ராவ் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. FICCI FLO கோவை, கோவை ஆக்ருதி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை இன்னர் வீல் சங்கம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கின.
நிகழ்ச்சியில் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி மற்றும் பாலூட்டல் ஆலோசகர் திருமதி பேபி ஸ்ரீ ஆகியோர் சிறப்புரையாற்றி தாய்மார்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் பொருத்தமான துணை உணவுகளுடன் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சரியான காலகட்டத்தில் திட மற்றும் துணை உணவுகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, மூத்த மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் பி. சுகன்யா கதிர், பிரசவத்திற்குப் பிந்தைய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து, தாய்மார்கள் தங்கள் தடுப்பு சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். உதவி கேட்பது பலவீனம் அல்ல, அது தன்னம்பிக்கையின் அடையாளம் என்றும், மருத்துவ ஆலோசனை இன்றி புட்டிப்பால் அல்லது பால் மாவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு, குழந்தை பராமரிப்பு குறித்த தெளிவுபடுத்தப்பட்டது. ராவ் மருத்துவமனையின் இந்தச் சிறப்பான விழிப்புணர்வு முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்